குறள் 12- கதை 12 துப்பார்க்குத் துப்பாய

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

மு.வ விளக்கம்:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
கலைஞர் விளக்கம்: 
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
சாலமன் பாப்பையா விளக்கம்:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

 கதை :


ஆறுமுகத்திற்கு 70 வயது நிரம்பியிருக்கும். தனது மகன் சண்முகம் விவசாய நிலத்தை விற்பதற்காக கையெழுத்து கேட்டு கொண்டிருந்தான் . ஆறுமுகத்திற்கு அதை விற்க மனதில்லை. சண்முகமோ அப்பா இந்த இடத்தை ரியல் எஸ்டேட் முகவர்களிடம் விற்றால் நிறைய விலைக்கு போகும் . அதை வைத்து நான் வியாபாரம் செய்து பிழைத்து  கொள்வேன் தயவு செய்து கையொப்பமிடுங்கள் என்று கூறினான் .

சண்முகம் சொல்வதும் சரியென ஆறுமுகத்திற்கு பட்டது . முன் காலத்தில் பருவ மழை தவறாது பெய்து அந்த மழையால் விவசாயம் செழிப்பாக இருந்தது, அது மட்டுமில்லாமல் மழை நீரை குட்டை குளம் என சேகரித்து அதையே பருகவதற்கும் உகந்ததாக இருந்தது. ஆனால்  இப்போது நிலைமை மாறிவிட்டது. 

முன் காலத்தில் தனக்கு உணவு பொருள் விளைய காரணமாக இருந்து தனக்கும் உணவாக இருந்த மழை இப்பொழுது கால மாற்றத்தினாலும் மரங்களை வெட்டி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதினாலும் விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதனாலும் தன்  மகனுக்கு உதவாமல் போனது நினைத்து கண்ணில் நீர் வழிய கையொப்பமிட்டார்.

வெளியே மழை பெய்யும் சத்தம் . மழையும் கைப்பொமிட சம்மதம் தெரிவித்தது போல .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறள் 10 - கதை 10

குறள் 11- கதை 11